கந்த சஷ்டி கவசத்தை அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டதாக கூறப்படும் விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிர்வாகியை போலீஸ் காவலில் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாசமாக பேசப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் குறித்து மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த யூடியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் ஜுலை 15ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதற்குப் பிறகு சுரேந்தர், சோமசுந்தரம், குகன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
இதற்குப் பிறகு அந்த சேனலில் இருந்த 500க்கும் மேற்பட்ட காணொளிகள் நீக்கப்பட்டன.
இந்த நிலையில், கைதுசெய்யப்பட்டவர்களை போலீஸ் காவலில் அனுப்பக் கோரி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனுத்தாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த நீதிமன்றம் செந்தில்வாசனுக்கு 4 நாள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டது.