திருச்சி அதவத்தூர் பாளையம் அருகே ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதவத்தூர் பாளையத்தை சேர்ந்த பெரியசாமி மகள் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கங்கா தேவி. இவர் மதியம் 1 மணி வரை வீட்டிலிருந்ததாக கூறப்படுகிறது.
அதன்பிறகு வீட்டைவிட்டு வெளியே வந்த மாணவியை சில மணி நேரமாக காணாததால் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பதட்டமடைந்து தேட ஆரம்பித்துள்ளனர்.
அப்போது ஊருக்கு வெளிப்புற பகுதியில் எரிந்த நிலையில் மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
முட்புதருக்கு அருகே மாணவி ஏன் சென்றார், யார் கொலைசெய்தார் என போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதியம் 1 மணி வரை வீட்டிலிருந்து வெளியே வந்த மாணவியை எரிந்த நிலையில் பார்த்த உறவினர்கள் அங்கேயே கதறி அழுதனர்.
இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமரசம்பேட்டை போலீஸார் சிறுமி உடலை கைப்பற்றி விசாரணையை துரிதப்படுத்தினர்.
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்க முயன்றனர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், காவல் துணை கண்காணிப்பாளர் கோகிலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியின் சடலத்திற்கு அருகே தீப்பெட்டி, பெட்ரோல் என அனைத்தும் இருந்துள்ளது. எனவே இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையாகவே பார்க்கப்படுகிறது.