புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகில் உள்ள பேயாடிக்கோட்டை ஊராட்சி மேல வசந்தனூர் கிராமத்தில் உள்ள கன்மாயில் விமானம் விழுந்து எரிவதாக தகவல்கள் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இப்படி ஒரு விபத்து இல்லை என்று கூறப்பட்டு வருகிறது.
இது குறித்து நாம் அந்த கிராமத்தினரிடம் கேட்டபோது, சம்பவ இடத்தில் இருந்து நம்மிடம் பேசிய கிராம இளைஞர்கள் பயங்கர அதிர்வோடு சத்தம் கேட்டது.
அப்போது வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்த போது ராணுவ விமானம் போல ஒரு விமானம் பறந்து போனது.
அதன் பிறகு மேலவசந்தனூர் கண்மாய் பக்கமாக புகை வந்தது. போய் பார்த்தால் கன்மாயில் இருந்த சீமைக்கருவேல மரங்கள், புல் எரிந்தது.
அங்கு விமானமோ, விமானத்தின் பாகங்களோ இல்லை.
அந்தப்பகுதியில் ஆடு, மாடு மேய்த்தவர்களும் விமானம் வந்து போன போது அதிக சத்தம் வந்தது. அப்போது ஏதோ பொருள் விழுந்தது போல இருந்தது.
அதன் பிறகு கன்மாய்யில் கருவேல மரங்கள் எரிந்து புகை வந்தது என்றும் சொல்கிறார்கள் என்றனர்.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில், சூப்பர்சோனிக் விமானம் வந்து சென்றுள்ளது. ஆனால் விபத்து இல்லை.
ஆனால் வேறு எங்கோ நடந்த விமான விபத்து படங்களை போட்டு தகவல்கள் பரப்பப்படுகிறது. விமான விபத்து என்பது வதந்தி என்றனர்.
கடந்த ஜனவரி 26ஆம் தேதி கலிபோர்னியாவில் நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்து ஒன்றின் படங்கள்தான் சமூக ஊடகங்களில் பரவும் படங்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்து எதுவும் நடைபெறவில்லை; வதந்திகளை நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.