இஸ்லாமியர்களுக்கு மருத்துவம் பார்க்கமாட்டோம் என வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்ட ஒரு பெண் மருத்துவர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சர்தார்ஷஹார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள் தங்களுக்கென வாட்ஸ் அப் குரூப் ஒன்றை வைத்துள்ளனர்.
அதில் மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு பெண் மருத்துவர் உள்ளிட்ட 3 பேர் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி இஸ்லாமியர்களுக்கு தாங்கள் சிகிச்சை அளிக்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் இஸ்லாமிய மருத்துவர்களிடம் சென்று அவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ளட்டும் எனவும் கூறியுள்ளனர்.
இந்த பதிவின் ஸ்கீரின்ஷாட் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, இதுதொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து வாட்ஸ்அப்பில் அவ்வாறு பதிவிட்ட பகவதி பதாலியா, லலித் சிங், அங்கிதா ஆகிய 3 மருத்துவர்கள் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம், தங்கள் மருத்துவமனை யாரையும் புறக்கணிப்பதில்லை என விளக்கம் அளித்துள்ளார்.