ஊரடங்கு காரணமாக சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் வழங்கப்பட்டு வந்த விலையில்லா உணவு நிறுத்தம்.
சென்னையில் மட்டும் 15 மண்டலங்களில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஊரடங்கால் தவித்து வரும் ஏழை எளிய மக்கள், சாலையோர வியாபாரிகள், வெளிமாநில தொழிலாளர்களின் நலன் கருதி தன்னார்வலர்கள் நிதியுதவியுடன் ஊரடங்கு காலத்தின் போது சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லா உணவை வழங்கி வந்தது சென்னை மாநகராட்சி.
ஊரடங்கு தொடங்கியதிலிருந்து தற்போது வரை சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மட்டும் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான உணவுகள் விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு காலத்தில் சென்னையில் மட்டும் சுமார் ஒரு கோடி பேர் அம்மா உணவகத்தில் விலையில்லா உணவை உண்டு பயன்பெற்றுள்ளனர்.
அம்மா உணவகத்தில் இன்று முதல் மீண்டும் உணவுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதன்படி இட்லி ஒரு ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய், சப்பாத்தி 3 ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.