மதுக்கடைகள் திறப்பு விவகாரத்தில் திமுக இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுவதாகக் கூறி, புதுச்சேரியில் அதிமுக-வினர் கருப்பு பலூனை பறக்க விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊரடங்கு அமலில் உள்ள போது, தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர், தமிழக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது புதுச்சேரி மாநிலத்தில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அரசு நேற்று முதல் மதுபானக் கடைகளை திறந்ததற்கு, அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மதுபானக் கடைகளை திறக்கும் விவகாரத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டி, புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில், அதிமுக சட்டமன்ற கொறாடா வையாபுரி மணிகண்டன் தலைமையில், அதிமுகவினர் கருப்பு பலூனை பறக்க விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து அதிமுக சட்டமன்ற கொறடா வையாபுரி மணிகண்டன் கூறுகையில், தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்தபோது அதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், தற்போது அவர்கள் ஆதரவுடன் புதுச்சேரியில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசு புதுச்சேரியில் மதுபான கடைகளை திறந்துள்ளதற்கு திமுக என்ன நடவடிக்கை எடுக்கபோகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.