வாக்கு எண்ணிக்கை மையம் அருகே தடியடி!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் வாக்கு எண்ணிக்கை மையம் அருகே லேசான தடியடி நடத்தப்பட்டது.

தமிழகத்தில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

சில இடங்களில் சில காரணங்களுக்காக தேர்தல் வாக்கு எண்ணிக்கை தாமதமாகிறது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் வாக்கு எண்ணிக்கை மையம் அருகே வேட்பாளர்களுடன் வந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் தங்களையும் அனுமதிக்க வேண்டும் என போராட்டம் நடத்தி வருவதால் அங்கு போலீசாரால் லேசான தடியடி நடத்தப்பட்டது.

அதாவது போலி முகவர் அட்டை கொண்டு வாக்கு எண்ணிக்கை மையம் உள்ளே செல்ல முயன்றதால், அதனை தடுக்க புதிய முகவர் அடையாள அட்டை தயாரிக்க அதிகாரிகள் முயற்சி செய்து வந்தனர்.

ஆனால் அந்த அடையாள அட்டை கிடைக்க கால தாமதம் ஆகும் என்பதால் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையம் உள்ளே அனுமதிக்க போராட்டம் நடத்தினர்.

இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

இதனால் திருவள்ளூர், சோழவரம் வாக்கு எண்ணிக்கை மையம் பரபரப்பாக காணப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே