குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தினர்.
குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள், இடதுசாரி மாணவ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்தும், அதனை எதிர்க்கும் கட்சிகளை கண்டித்தும் பாஜகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகே நடைபெற்ற பேரணியில், தமிழக பாஜக செயலாளர் கே.டி.ராகவன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் பாஜகவுடன், ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத், ஏபிவிபி மாணவர் அமைப்பினர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய KT ராகவன், பாஜக கூறிய தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவதாக கூறினார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரையில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சிகளை கண்டித்து பாஜகவினர் கோஷமிட்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இல. கணேசன், இந்தியாவில் உள்ள வரலாற்று பிழைகளை மோடி திருத்தி வருவதாக கூறினார்.