ஸ்ரீ பெரும்புதூரில் மூடப்பட்ட நோக்கியா ஆலையை, ஐபோன்களுக்கு சார்ஜர் தயாரிக்கும் சால்காம்ப் என்ற மற்றொரு நிறுவனம் ஏற்று நடத்த உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் எக்ஸ்ஆர் மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ளதாகவும், இந்த போன் ஏற்றுமதி செய்யப்படுவதோடு, உள்ளூர் விற்பனைக்கும் அனுப்பப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் சென்னை அருகே ஸ்ரீ பெரும்புதூரில் பல ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கும் நோக்கியா ஆலையை, சால்காம்ப் என்ற நிறுவனம் ஏற்று நடத்த ஒப்பந்தம் முடிவாகியுள்ளது என்று கூறிய அவர், ஐபோன்களுக்கு சார்ஜர் தயாரிக்கும் இந்த நிறுவனம், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் உற்பத்தியை துவக்கும் என்றும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இதனால் நேரடியாக 12 ஆயிரம் பேரும் மறைமுகமாக 60 ஆயிரம் பேரும் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். முன்னதாக ஸ்ரீபெரும்புதூரில் 2006ம் ஆண்டு தொடங்கப்பட்ட நோக்கியா நிறுவனம் வரி பிரச்னை காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.