வேலில் சொருகிய 9 எலுமிச்சை பழங்கள் ரூ.69,000-க்கு ஏலம்..!!

திருவெண்ணெய்நல்லுார் அருகே, முருகன் கோவில் வேலில் சொருகப்பட்ட எலுமிச்சை பழங்கள், 69 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயின.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில் இரட்டைக் குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோவில் உள்ளது. கருவறையில் வேல் மட்டுமே உள்ள இக்கோவிலில், பங்குனி உத்திர திருவிழா ஒன்பது நாட்கள் நடத்தப்படுவது வழக்கம். திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் ஒன்பது நாள் உற்சவ காலங்களில், தினமும் வேலில் சொருகப்படும் எலுமிச்சை பழங்கள் இடும்பன் பூஜையில் வைத்து, பங்குனி உத்திரத்தின் மறுநாள் நள்ளிரவு ஏலம் விடப்படும்.

இதன்படி, நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்பட்டன. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குடும்ப பிரச்னை உள்ளவர்கள் என, பலர் ஏலம் எடுத்தனர்.

முதல் நாள் எலுமிச்சை பழம் 13 ஆயிரம் ரூபாய்; மூன்றாம் நாள் எலுமிச்சை 11 ஆயிரம்; திருக்கல்யாண எலுமிச்சை 15 ஆயிரத்து 200 என, ஒன்பது எலுமிச்சை பழங்களும் மொத்தம் 69 ஆயிரத்து 100 ரூபாய்க்கு ஏலம் போயின. கடந்தாண்டு எலுமிச்சை பழத்தை ஏலம் எடுத்து குழந்தை பாக்கியம் பெற்றவர்கள், குழந்தையின் எடைக்கு எடை நாணயங்களை வழங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே