6 வயது மகளை கழுத்தை அறுத்து கொலை செய்து, தாய் தற்கொலை முயற்சி

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கீழ்சிறுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசன் (35). இவரது மனைவி சுகன்யா (28). இவர்களது 6 வயது மகள் நிவேதா.

இந்நிலையில் கடந்த ஆண்டு கலையரசனின் தாய் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூக்கில் தொங்கிய மாமியாரின் சடலத்தை சுகன்யா தான் முதலில் சென்று பார்த்துள்ளார். அப்போது ஏற்பட்ட அதிர்ச்சியில் சுகன்யா உளவியல் ரீதியாகப் பாதிப்படைந்தார்.

அதன் பின்னர் திடீர் திடீரென சுகன்யா உணர்ச்சி வசப்படுவார் என்கிறார்கள் உறவினர்கள்.

இந்த நிலையில், கலையரசன் வெளியில் சென்றிருந்த சூழலில், மகளுடன் வீட்டில் தனியாக இருந்த சுகன்யாவின் மனநிலை மிகக் கொடூரமாக மாறியது. 

விளையாடிக் கொண்டிருந்த மகளை அடித்துத் துன்புறுத்தி பாத்ரூமுக்கு இழுத்துச் சென்றுள்ளார்.

அங்கு வைத்து அரிவாள் மனையால் மகளின் கழுத்தை அறுத்துத் துடிக்க துடிக்க கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அதே கத்தியால் தன்னுடைய கழுத்தையும் அறுத்துக் கொண்டதாகவும் சொல்கிறார்கள்.

ரத்தம் பீரிட்டு வெளியேறியதால், சுகன்யா மயங்கியிருக்கிறார்.

வெளியில் சென்றிருந்த கலையரசன் வீடு திரும்பியபோது, மனைவி, மகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வீடு முழுக்கத் தேடியபோது கழிவறையில் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து திடுக்கிட்டுக் கதறி அழுதார்.

அக்கம், பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் தண்டராம்பட்டு போலீஸார் சம்பவப் பகுதிக்கு விரைந்து வந்தனர்.

உயிருக்குப் போராடிய சுகன்யாவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

சிறுமியின் சடலமும் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கலையரசன் கொடுத்த புகாரின்பேரில் மகளைக் கொலை செய்த மனைவி சுகன்யா மீது போலீஸார் கொலை வழக்குப்பதிந்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே