மாதவிடாயில் கண்டிப்பாக சாப்பிடவேண்டிய 6 உணவுகள், அனைத்து பெண்களுக்கும் !

பெண் பிள்ளைகளுக்கு வலி மிகுந்த காலம் வாழ்நாள் முழுவதும் உண்டாகும். அது எந்தகாலம் என்றால் பட்டென்று சொல்லிவிடுவீர்கள் மாதவிடாய் காலம் என்று.
மாதவிடாய் காலம் வரும்போதெல்லாமே இந்த வலியும் உபாதையும் அவஸ்தையும் இல்லாமல் இருக்காது. சில பெண்களுக்கு இயல்பான உதிரபோக்கு இருந்தாலும் கூட உடலில் அசெளகரியத்தை உண்டு செய்யும். இன்னும் சிலருக்கு உதிரபோக்கு அதிகமாக இருக்கும். சில பெண்களுக்கு வயிறு வலி முதல் இடுப்பு வலி வரை தாங்க முடியாத வலியை உண்டாக்கும். மாதவிடாய் காலம் எப்போது வந்தாலும் அது அவஸ்தையை உண்டாக்கிதான் செல்லும். பூப்படைதல் முதல் மெனோபாஸ் காலங்கள் வரை அவஸ்தையை உண்டு பண்ணவே செய்யும். இந்த அவஸ்தையை தவிர்க்க முடியாது. ஆனால் அன்றாட வாழ்வியல் முறையிலும் உணவு முறையிலும் இதை குறைக்க முடியும். அப்படி எடுத்துகொள்ள வேண்டிய முக்கியமான 5 உணவுகள் எதுவென்பதை பார்க்கலாம்.
​பழங்களில் வாழைப்பழம்
இயல்பாகவே தினம் ஒரு பழம் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை செய்யும் என்று சொல்வார்கள். மாதவிடாய் காலத்தில் உடல் அசெளகரியமும் வலியும் இணைந்து மன அழுத்தத்தை உண்டாக்கிவிடும். வாழைப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீஷியம், வைட்டமின் பி 6, கால்சியம், நார்ச்சத்து போன்ற சத்துகளும் உண்டு. இதில் இருக்கும் சர்க்கரை உடலுக்கு உடனடியாக ஆற்றலை கொடுக்கிறது.நாள் முழுக்க சோர்வு நீங்கி, மன அழுத்தம் இல்லாமல் வைக்க உதவுகிறது.

மாதவிடாய் காலங்களில் உண்டாகும் உடல் சோர்வும் மன அழுத்தமும் போக தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது மிகுந்த நன்மை பயக்கும். இது அமிலத்தன்மை வாய்ந்தது என்பதால் காலை வேளையில் வெறும் வயிற்றில் எடுக்க வேண்டாம்.

​கீரை வகைகள்
கீரை வகைகள்

கீரை பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அந்த நாளை உற்சாகமாக கடக்க கீரை சேர்த்த உணவுகள் பெரிதும் உதவி புரியும். மாதவிடாய் நாளில் உதிர போக்கு ஏற்படுவதால் உடலில் ரத்த இழப்பு ஏற்படுவது உண்டு. தொடர்ந்து உண்டாகும் ரத்த இழப்பு அதிகப்படியாகும் போது, ரத்த சோகை பிரச்சனைக்கு உள்ளாவதுண்டு.

கீரை வகைகளில் இரும்புச்சத்து இருப்பதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையாமல் பாதுகாக்க முடியும். ரத்த சோகை உண்டாகும் போது உடல் களைப்பும், சோர்வும் அதிகரிக்க கூடும். இவை மாதவிடாய் காலங்களில் கூடுதலாக அதிகரிக்க செய்யும். இந்த களைப்பை போக்க கீரைகளை உணவில் சேர்ப்பது அவசியம்.

கீரை பொரியலாகவோம், கூட்டாகவோ தினம் ஒரு வேளை எடுத்துகொள்வதன் மூலம் ரத்த இழப்புக்கான இரும்புசத்தை ஓரளவு மீட்டெடுக்க முடியும்.

​சத்து பால்
மாதவிடாய் நாளில் தற்காலிகமாக ஆற்றல் தரும் செயற்கை பானங்களுக்கும், கார்பனேட்டட் பானங்களுக்கும் விடை கொடுப்பது அவசியம். டீ, காபிக்கு மாற்றாக பால் குடிக்க வேண்டும். கால்சியம் நிறைந்த பால் எலும்பு தேய்மானத்தை தடுப்பதால் மெனோபாஸ் காலத்தில் வரக்கூடிய ஆஸ்டியோபெராசிஸ் பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.

பாதாமை ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து காய்ச்சி குடிக்கலாம். இதனோடு கசகசாவையும் அரைத்து சேர்த்து காய்ச்சினால் அந்த மூன்று நாட்களில் உண்டாக கூடிய கை, கால் குடைச்சல், இடுப்பு வலி, தொடை வலி போன்றவை குறையும். ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் இந்த உபாதை இருப்பவர்கள் மாதவிடாய் காலத்துக்கு ஒரு வாரம் முன்கூட்டியே தினமும் இரவு ஒரு டம்ளர் குடித்துவரலாம்.

வெந்தயம்
வெந்தயம் சேர்த்த உணவுகள் கர்ப்பப்பை ரணத்தை ஆற்றும். கர்ப்பப்பை உள்சுவர் தடிமன் பொறுத்து அடி வயிறு வலி உபாதை அதிகமாக இருக்கும். பிரசவத்துக்கு பிறகு பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் கூடுதலாக இடுப்பு பகுதியில் அதிக வலி உண்டாகக்கூடும். சிலருக்கு அடி வயிறு வலி இருக்கும். சிலருக்கு பின்புற அடி முதுகு வலி, முதுகு வலி போன்ற பிரச்சனைகள் இருக்கும். இந்த வலி உபாதை எல்லாமே கர்ப்பப்பை கோளாறுகளால் வரக்கூடியதே. பெரும்பாலும் இவை ஹார்மோன் சுரப்பு பிரச்சனைகளின் தொடக்கமாகவும் இருக்கலாம். வெந்தயத்தில் இருக்கும் டயாஜினின் என்னும் வேதிப்பொருளானது ஹார்மோன் சுரப்பு வேலையை சீராக்குவதால் கர்ப்பப்பை கோளாறுகள் சரியாகி மாதவிடாய் அவஸ்தை குறைகிறது.

வெந்தயத்தை பொடித்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். அல்லது வெந்தயக்கஞ்சி செய்தும் ஒரு நாள் உணவாக குடிக்கலாம். எனினும் மாதவிடாய் காலத்தில் இதை எடுக்கும் போது தொடர்ந்து வரும் மாதவிடாய் நாளில் வலிஉபாதை குறைந்து பெருமளவு நிம்மதியை உணர்வீர்கள்.

வாழைப்பூ
துவர்ப்பு நிறைந்த வாழைப்பூ பெண்கள் அடிக்கடி சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை பிரச்சனை கூட வராமல் தடுக்கலாம். இதில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீஷியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிரம் போன்றவை உண்டு. வைட்டமின் ஏ, வைட்டமின் பி 1 சத்துகளும் உண்டு. இதை கர்ப்பப்பையின் காவலன் என்று அழைக்கிறார்கள்.

மாதவிடாய் நாளில் வாழைப்பூவை சுத்தம் செய்து அரிசி கழுவிய நீரில் கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும். அதை கடுகு, உ.பருப்பு, சாம்பார் வெங்காயம் சேர்த்து வதக்கி நறுக்கிய வாழைப்பூ போட்டு வதக்கி இறக்கவும். இதை சாதத்தில் கலந்து நெய்விட்டு பிசைந்து சாப்பிட்டால் போதும். கர்ப்பப்பையில் ஒதுங்கி இருக்கும் ரத்தமும் வெளியேறும். ரத்தபோக்கும் கட்டுக்குள் இருக்கும்.

​திரவ ஆகாரம்
மாதவிடாய் நாள் முழுக்க முழுக்க வயிற்றை குளுமையாக வைத்திருந்தாலே வலி இல்லாமல் வைத்திருக்க முடியும். திரவ ஆகாரம் என்றாலே தண்ணீர் தான். பலரும் செய்யும் தவறு அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் சிறுநீர் கழிக்க நேரிடும் என்று தவிர்ப்பதுதான். இதனால் வலி உணர்வு அதிகரிக்கவே செய்யும். மாதவிடாய் நாளில் தினசரி 8 முதல் 12 டம்ளர் வரை தண்ணீர் அவசியம்.
தண்ணீருக்கு மாற்றாக நீர் மோர், உப்பு சர்க்கரை சேர்த்து எலுமிச்சை கலந்த வெதுவெதுப்பான நீர் குடிப்பதன் மூலம் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க முடியும். இதன் மூலம் புத்துணர்ச்சி குறையாமல் பாதுகாக்க முடியும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே