தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 477 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாராத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனை அடுத்து நோய் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 477 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 384 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனவும் 4 பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள், 89 பேர் மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 477 பேரில் 93 பேர் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள்.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 332 கொரோனாவால் பாதிக்கப்பட்டுளளனர்.
இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,271 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து இன்று ஒரே நாளில் 939 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட 10,585 பேரில் 6,970 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 3,538 பேர் தமிழகம் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இதுவரை 3,13,639 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் இன்று மட்டும் 8,270 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 0.67% ஆக கட்டுக்குள் உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.