1300 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!

கார்ப்பரேட் வரி விகிதம் குறைப்பு உள்ளிட்ட மத்திய நிதியமைச்சரின் அறிவிப்புகளால், கடந்த வெள்ளிக்கிழமை பங்குச்சந்தைகளில் மிகப்பெரும் எழுச்சி ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஆயிரத்து 921 புள்ளிகள் அளவுக்கு உயர்ந்தது.

இது பங்குச்சந்தை வரலாற்றில், ஒரேநாளில் ஏற்பட்ட இரண்டாவது மிகப்பெரிய உயர்வாக அமைந்தது. இதனால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 7.1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஒரே நாளில் அதிகரித்ததாக கூறப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையின் ஒட்டுமொத்த சந்தை மூலதன மதிப்பு 145 லட்சம் கோடியாக உயர்ந்து, 2 டிரில்லியன் டாலர்களை கடந்தது.

இரு நாள் விடுமுறைக்குப் பிறகு, வாரத்தின் முதல் நாளான இன்றும் இந்திய பங்குச்சந்தைகளில் எழுச்சி காணப்படுகிறது. மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் உயர்வுடன் தொடங்கி, குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் ஆயிரத்து 300 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது.

இதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் காலை வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் 392 புள்ளிகள் வரை அதிகரித்தது.

தொடர்ந்து இரண்டாவது வர்த்தக நாளாக எழுச்சி காணப்படுவதால், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே