சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (சனிக்கிழமை) ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பஞ்சாப் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் மந்தீப் சிங் களமிறங்கினர். இருவரும் அதிரடியான தொடக்கத்தை அளிக்க முயற்சித்தனர்.

எனினும், 5-வது ஓவரில் சந்தீப் பந்தில் மந்தீப் (17 ரன்கள்) ஆட்டமிழந்தார். இதையடுத்து, கெயில் களமிறங்கினார்.

களத்தில் கெயில் இருந்தபோதிலும் ரன் ரேட் பெரிதளவில் உயரவில்லை. இந்த நிலையில் 20 ரன்கள் எடுத்த கெயில், ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ராகுல் 27 ரன்களுக்கு ரஷித் கான் சுழலில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதற்கு அடுத்த ஓவரில் ஹூடா ரன் ஏதும் எடுக்காமல் ரஷித் சுழலில் வீழ்ந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் பவுண்டரிகளே இல்லாமல் ஓவருக்கு 6-க்கும் குறைவான ரன் ரேட்டில் திணறி வந்தது.

களத்தில் நிகோலஸ் பூரன் இருந்ததால், கடைசி கட்டத்தில் அதிரடியாக ரன் குவிக்க திட்டமிட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஜோர்டன் விக்கெட்டையும் ஹோல்டர் வீழ்த்தினார்.

இதையடுத்து, பெரிதளவில் அதிரடி கிடைக்காததால் கடைசி கட்டத்திலும் ரன் ரேட் பெரிதளவில் உயரவில்லை.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஹைதராபாத் தரப்பில் சந்தீப் சர்மா, ஜேசன் ஹோல்டர், ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே