12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனத்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம்,திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் திண்டுக்கல்லில் தலா 6 செண்டி மீட்டரும்,சேலம் மேட்டூரில் 4 செண்டி மீட்டரும், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆகிய இடங்களில் தலா 3 செண்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே