#BREAKING : தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு – முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் பழனிசாமி கூறியதாவது,

2019 – 2020ஆம் கல்வி ஆண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும் 11-ஆம் வகுப்பில் தேர்வு நடத்தாமல் விட்டுப் போன (வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் (புதிய பாடத்திட்டம்), வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல், தொழிற்கல்வி – கணக்கு – பதிவியல் (பழைய பாடத்திட்டம்) ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் ஜூன் 15-ம் தேதி முதல் ஜூன் 25 வரை தேர்வு நடத்த ஏற்கனவே அரசு உத்தரவிட்டிருந்தது. 

அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தது.

இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டு, உயர் நீதிமன்றம் இந்த தேர்வுகளை தற்போது கரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில், தள்ளிவைப்பதுபற்றி அரசு பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து அரசு விரிவாக ஆய்வு செய்தது. தற்போது உள்ள நிலையில், கரோன தொற்று சென்னையிலும், சில மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நோய் தொற்று வல்லுநர்கள், நோய் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என கருத்துத் தெரிவித்துள்ளனர்.

எனவே, பெற்றோர்களின் கோரிக்கையையும், நோய் தொற்றின் தற்போதைய போக்கையும் கருத்தில் கொண்டு, மாணவர்களை நோய் தொற்றில் இருந்து காக்க, வரும் 15-ம் தேதி முதல் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளும் மற்றும் 11-ம் வகுப்புக்கான விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

எனவே, இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

மாணவ, மாணவிகள், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் எடுத்த மதிப்பெண்களை கணக்கில் எடுத்து 80% மதிப்பெண்ணும், பள்ளி வருகையை கணக்கில் எடுத்து 20% மதிப்பெண்ண் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

நிலுவையில் உள்ள 12-ம் வகுப்புத் தேர்வு குறித்து விரைவில் முடிவெடுத்து அறிவிக்கப்படும்.

சூழலைப் பொறுத்து 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத முடியாத மாணவ, மாணவிகளுக்கு மறு தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே