தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு கூடுதலாக பி.சி.ஆர் கருவிகளை வாங்கிவருகிறது.
முதற்கட்டமாக தென்கொரிய நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்ட ஒரு லட்சம் பி.சி.ஆர் கருவிகள் கடந்த வாரம் தமிழகம் வந்தடைந்தன.
இதன் மூலம் இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரம் பிசிஆர் கருவிகள் வந்தடைந்துள்ளன.
தமிழகத்தில் நாள்தோறும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது வரை பி.சி.ஆர் மூலமாக இதுவரை 4,21,450 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு கூடுதலாக 10 லட்சம் பிசிஆர் கருவிகளை உலகின் பல்வேறு நிறுவனத்திடம் வாங்க நடவடிக்கை எடுத்திருந்தது.
அந்த வகையில் முதற்கட்டமாக தென்கொரிய நிறுவனத்திடமிருந்து 1 லட்சம் பிசிஆர் கிட்கள் கடந்த வாரம் தமிழகம் வந்தடைந்தது.
அதன் தொடர்ச்சியாக 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் கடந்த வெள்ளிக்கிழமை மும்பை வந்தடைந்தன. இந்த கருவிகள் இன்று தமிழகம் வந்தடைந்தன.
இதனைத் தொடர்ந்து, வரும் வாரங்களில், வாரத்திற்கு ஒரு முறை 1 லட்சம் வீதம் மீதமுள்ள 7.50 லட்சம் பி.சி.ஆர் கிட்கள் வர இருப்பதாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.
இனிவரும் காலங்களில் 41 அரசு பரிசோதனை மையங்கள் மற்றும் 27 தனியார் பரிசோதனைக் மையங்கள் என 68 பரிசோதனை மையங்களிலும் பரிசோதனை செய்யும் மாதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.