ராஜேந்திரபாலாஜி வீட்டுக்கு 1.5 டன் ஸ்வீட் பார்சல்..; 22 ஆவின் பால் நிலையங்களுக்கு சீல்வைப்பு..!!

ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

சேலம் ஆவின் பால் பண்ணையில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். பால் பண்ணை வளாகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி பிரிவு, கிடங்குகள் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டார். முன்னதாக, சேலம் மாநகரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆவின் விற்பனை நிலையங்களை அமைச்சர் நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர் கூறியது:

“கடந்த ஆட்சியின் போது ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கின்றன. குறிப்பாக 234 பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி பணிநீக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

636 முதுநிலை மற்றும் இளநிலை ஆலை பணியாளர்களை நியமிக்க முறைகேடாக பணம் பெற்றுள்ளதாக வந்த தகவலை அடுத்து அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தப் பணியிடங்களுக்குப் புதிதாக பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் 22 நிலையங்கள் உள்பட விலை குறைப்புக்கு பின்பும் பழைய விலைக்கே பால் விற்பனை செய்த நிலையங்களுக்கு சீல் வைக்கப்ப்டுள்ளது.

தமிழகத்தில் 25 பால் ஒன்றியங்களிலும் முறைகேடு நடந்துள்ளது. இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு தீபாவளி நேரத்தில் ஒன்றரை டன் அளவுக்கு ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது” என்றார் அவர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே