வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய உயர்நீதிமன்ற நீதிபதி குடும்பம்!!

வரதட்சணை கொடுமை செய்த ஓய்வு பெற்ற நீதிபதி குடும்பம் அது குறித்த சி.சி.டி.வி. வீடியோ வெளியாகி பரபரப்பு!!

ஹைதராபாத்தில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நூட்டி ராமமோஹனராவ் தனது மனைவி, மகனுடன் சேர்ந்து தன்னை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக அவரது மருமகள் சி.சி.டி.வி. காட்சிகளுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

வீடியோவில் உள்ள நேரம் ஏப்ரல் 20, 2019 அன்று இரவு 11 மணி என காட்டுகிறது. வீடியோவில் நான்கு பேர் காணப்படுகிறார்கள் – ஒரு இளைய ஜோடி மற்றும் ஒரு வயதான ஜோடி.

திடீரென்று, இளையவர்  அவரது மனைவியை கீழே தள்ளி  தாக்குகிறார். அதனைத் தொடர்ந்து வயதான ஒருவர் அந்தப் பெண்ணின் கையை வளைத்துப் பிடித்து அமரவைக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

தாக்குதலுக்குள்ளாகும் பெண்ணின் ஒன்றரைவயது பெண் குழந்தை, தன் தாய் தன் கண்முன்னே தாக்கப்படும் பதற்றத்தில் அருகில் ஓடிவர அந்தக் குழந்தையை இழுத்துத் தள்ளிவிட்டு பெண் தாக்கப்படுகிறார்.

இந்நிலையில் ஹைதரபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி நூட்டி ராமமோகனராவின் மருமகள் சிந்து சர்மா, தன்னை தனது கணவர் நூட்டி வசிஷ்ட், மாமனார் மற்றும் மாமியார் நூட்டி துர்கா ஜெயலட்சுமி ஆகியோர் தாக்கியதாக காவல் நிலையத்தில் குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்துள்ளார்.

அவர்கள் தன்னை வரதட்சணைக்காக கொடுமைப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள அவர், சி.சி.டி.வி. காட்சிகளையும் போலீசாரிடம் கொடுத்துள்ளார். தனது கணவர் வீட்டு சி.சி.டி.வி. காட்சிகளை காண்பதற்கான ஐ.டி. மற்றும் பாஸ்வேர்ட் தனக்கு தெரியும் என்பதால் அதனைக் கொண்டு போலீசார் காட்சிகளை எடுத்ததாக சிந்து சர்மா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது 4 வயது மற்றும் ஒன்றரை வயது மகள்களை ஒப்படைக்குமாறு சிந்து கோரிய நிலையில் சில சமூக ஆர்வலர்களின் தலையீட்டால் இன்னும் தாய்ப்பால் அருந்தும் ஒன்றரை வயதுக் குழந்தை மட்டும் சிந்துவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் 4 வயதுக் குழந்தை ஒப்படைக்கப்படவில்லை.

இதை தொடர்ந்து, தனது மகள் நடந்த அனைத்தையும் நேரில் பார்த்ததால் வெளியில் சொல்லிவிடக்கூடும் என்ற அச்சத்தில் அவர்கள் தனது மகளை தன்னிடம் ஒப்படைக்க அஞ்சுவதாக சிந்து சர்மா குற்றம்சாட்டியுள்ளார். 


உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே