ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை – மூளையை வெட்டி தட்டில் வைத்துச் சென்ற கொடூரம்

சென்னை திருவல்லிக் கேணியில் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ரவுடியை குடும்பத்தினர் முன்னிலையிலேயே சரமாரியாக வெட்டிக் கொன்ற மர்ம நபர்கள் அவரது மூளையை வெட்டி தட்டில் வைத்து விட்டுச் சென்றனர்.

சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பத்தைச் சேர்ந்தவர் அரி என்ற அறிவழகன். ரவுடி பட்டியலில் உள்ள அறிவழகன் மீது ரவுடி பல்பு குமார் கொலை வழக்கு உட்பட கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் நேற்று இரவு இவர் தனது வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே அறிவழகனை சரமாரியாக வெட்டினர்.

இதில் அறிவழகன் தனது குடும்பத்தினர் முன்னிலையிலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அறிவழகனின் மூளையை அந்தக் கும்பல் கொடூரமான முறையில் வெட்டி எடுத்து தட்டில் வைத்துவிட்டுச் சென்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

குடும்பத்தினர் கூச்சல் எழுப்பி அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்தக் கும்பல் தப்பியோடியது. கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள திருவல்லிக்கேணி போலீசார் பல்புகுமாரின் தம்பியும், ரவுடியுமான சொறி விஜய் மற்றும் கூட்டாளிகளை சந்தேகத்தின் பேரில் தேடி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே