மெரினா கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் கட்டணமின்றி பார்த்து ரசித்தனர்

கலங்கரை விளக்கம் தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் கட்டணமின்றி பார்த்து ரசித்தனர்.

தகவல் தொடர்பு வசதி இல்லாத பண்டைய காலத்தில் கப்பல்களுக்கும், மீனவர்களுக்கும் துறைமுக நுழைவு வழிகாட்டியாக கலங்கரை விளக்கம், ஏற்படுத்தப்பட்டது.

1927 ம் ஆண்டு செப்டம்பர் 21 ம் தேதி இந்திய-பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கலங்கரை விளக்கம் அமைப்பதற்கான சட்டம் இயற்றப்பட்டது.

இதை நினைவுகூரும் வகையில் 92 வது கலங்கரை விளக்க தினத்தையொட்டி நாட்டில் உள்ள 189 கலங்கரை விளக்கங்களையும் கட்டணமின்றி பார்வையிட அனுமதிக்கப்பட்டது.

மெரினா கடற்கரையில் 1977ஆம் ஆண்டு ஜனவரி 10 ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்த 45 அடி உயர கலங்கரை விளக்கத்தில் பொதுமக்கள் கட்டணமின்றி இலவசமாக பார்வையிட்டனர்.

இதன் ஒளி 20 கடல் மைல் அளவிற்கு தெரியும். 9 வது தளத்தில், பார்வையாளர்கள் நின்று ரசிக்க தடுப்பு கம்பிகளுடன் வியூ கேலரியும், 10 வது தளத்தில் உயர் பாதுகாப்பு ரேடாரும் உள்ளது.

முதல் தளத்தில் பழைய தொழில்நுட்ப கலங்கரை விளக்குகளும், அதன் செயல்பாடுகள் மற்றும் தற்போதைய அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயங்குவது, ஆகியவற்றை விளக்கும் புகைப்படங்களுடன் விளக்க உரையும் வைக்கப்பட்டுள்ளது.

இது கடந்த 2017 ஆம் ஆண்டு சுற்றுலாத்துறையின் சிறந்த லைட் ஹவுஸ் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே