முதியவரிடம் பேச்சுக்கொடுத்து ரூ.7,000 பறித்தவருக்கு தர்ம அடி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்த முதியவரிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே அவரிடம் பணத்தை பறித்துக் கொண்டு ஓடிய இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் அவரை போலிசாரிடம் ஒப்படைத்தனர்.

சேரநோர் பகுதியை சேர்ந்த பெரியண்ணன் என்பவர் இன்று செஞ்சியில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது அங்கு வந்த குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் பெரியவரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே அவரிடமிருந்த ஏழாயிரம் ரூபாயை பறித்து கொண்டு ஓடியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் சத்தமிட்டபடியே இளைஞரின் பின்னால் ஓடியுள்ளார்.

இதனை பார்த்த பொதுமக்கள், தப்பி ஓடிய கோவிந்தராஜ் என்ற இளைஞரை விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த செஞ்சி போலீசார் கோவிந்தராஜ் – ஐ பொதுமக்களிடம் இருந்து மீட்டு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க வருபவர்களிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே பணம் பறிப்பது, ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து கோவிந்தராஜ் – ஐ கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே