பெண்களை அச்சுறுத்தும் புற்றுநோய்… அறிகுறிகள் என்னென்ன, தடுப்பது எப்படி?

ஆண்களை விடப் பெண்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக எச்சரிக்கிறது, சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சமீபத்தில் வெளியிட்ட ஒரு திட்ட அறிக்கை. 2016-ல் மட்டும் 65, 590 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அதில் 28,971 பேர் ஆண்கள்; 36,619 பேர் பெண்கள். இவர்களில் மார்பகப் புற்றுநோய் பாதிப்புள்ளவர்கள் 24.7% பேர்; கருப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்புள்ளவர்கள் 19.4% பேர். நிகழாண்டில் புதிய புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 78 ஆயிரத்தைத் தாண்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கு ஏற்படும் புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி என்பது குறித்து விளக்குகிறார், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரும் மகப்பேறு மருத்துவருமான அனு ரத்னா.

”புற்றுநோய் என்பது பாலினம் சார்ந்து வருவதில்லை. அது எவரையும் வேறுபாடின்றி தாக்கும் என்றாலும் மனித உடலில் மார்பகங்களும், கற்பப்பையும் பெண்களுக்கு மட்டுமே இருப்பதால் பெண்களை தாக்கும் கொடிய புற்றுநோயாக மார்பக புற்றுநோயும் கர்ப்பப்பைவாய் புற்றுநோயும் உள்ளது. கர்ப்பப்பை மட்டும் அல்லாமல் (Uterine Cancer) அதன் அருகில் இருக்கும் சினைப்பைகளும் (Ovarian Cancer), கர்ப்பப்பையின் வாய் பகுதியும் (Cervical Cancer) கூட புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படும்.

30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இதில் அதிகம் பாதிக்கப்படுவதால் தமிழக அரசு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக மார்பக மற்றும் கருப்பைவாய் வாய் பரிசோதனை செய்ய வழிவகை செய்துள்ளது. தமிழக அரசின் இந்த திட்டம் மிக சிறப்பாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செயல்பட்டு வருகிறது. இந்த பரிசோதனைகளுக்காக யாரும் உள்நோயாளியாக இருக்க வேண்டாம். வெளிநோயாளியாகவே சென்று இலவசமாக இந்த பரிசோதனைகளை செய்து கொள்ளலாம். மிகமிக எளிய பரிசோதனைகள் தான் இவை.

மார்பகங்கள் உடலின் மேல் உள்ள உறுப்புதான். அதனால் அதில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களையும் நம்மால் எளிதாக காண முடியும். இருப்பினும் பெண்கள் சிலர் கூச்சப்பட்டுக்கொண்டு இந்த மாற்றங்களை கூட மருத்துவரிடம் சென்று காட்டாமல் நோய் வளரவிட்டு அதன்பின் பிரச்சனை அதிகமானப் பின் மருத்துவரிடம் வருவார்கள். இது தவறு. நம் உடல் மீதான அக்கறை நமக்கு முதலில் வேண்டும். அடுத்தது மற்ற உறுப்புக்கள் போல மார்பகங்களும் ஒரு உடல் உறுப்பு தான். அதனால் கை வலி, கால் வலி, காயம் வந்தால் எப்படி மருத்துவரிடம் போகிறோமோ அதேபோல் மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கும் நாம் மருத்துவரிடம் போக வேண்டும் என்கிற விழிப்புணர்வு பெண்கள் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.

நோய் வரும் முன் காக்கும் விதமாகவும், நோயின் ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் விதமாகவும் நாம் நம்மை மார்பக மற்றும் கருப்பைவாய் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். மார்பக பரிசோதனை என்பது சுய பரிசோதனை தான். கருப்பைவாய் பரிசோதனை மட்டும் மருத்துவர் அல்லது செவிலியர் பார்ப்பார்.

VIA (Visual Inspection after Aceticacid) பரிசோதனை மூலம் கருப்பை வாய் பரிசோதிக்கப்படும். கருப்பை வாய் புற்று நோயின் மிக மிக ஆரம்பகால நிலையினை இந்த எளிய பரிசோதனை மூலம் நாம் கண்டறியலாம். இப்படி ஆரம்பகால நிலையினை நாம் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளும்போது புற்றுநோய் வளராமல் முளையிலேயே கிள்ளப்படுகிறது” என்கிறார் அவர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே