புதிய கல்விக் கொள்கை குறித்து 2லட்சம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன

புதிய கல்விக்கொள்கையின் திருத்தப்பட்ட வரைவு அறிக்கைக்கு இம்மாத இறுதியில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும், அந்த அறிக்கை நவம்பர் மாதம் 11- ஆம் தேதி வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் 2017 ஆம் ஆண்டு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த ஜூன் மாதம் 1 ஆம் தேதி தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது.

இதில் இந்தி கட்டாயம் என்ற மும்மொழி கொள்கைக்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அப்பகுதியை மட்டும் நீக்கி புதிய வரைவு கொள்கை திருத்தி வெளியிடப்பட்டது.

வரைவு கொள்கை குறித்து பொதுமக்கள் ஆலோசனை வழங்க கடந்த மாதம் 15 ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.

இதில் 2 லட்சத்திற்கும் அதிகமான கருத்துகள் கிடைத்ததாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.

இந்த கருத்துகளை ஆய்வு செய்ய 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும்,  இந்த குழு வரைவு அறிக்கையில் மாற்றம் மேற்கொள்வது குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட இறுதி வரைவு அறிக்கை குறித்து,  வருகிற 25 ஆம் தேதி  நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின், புதிய கல்விக் கொள்கையை தேசிய கல்வி தினமான நவம்பர் மாதம் 11 ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாக மத்திய மனிதவள அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே