பிரதமர் மோடியின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்கக் கூடாது

பிரதமர் மோடியின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்கக் கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற “டாக் ஜர்னலிசம்” எனும் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற சசிதரூர், நாட்டின் பொருளாதாரம், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை குறித்து பேசினார்.

அப்போது கட்சியின் தலைவர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என தாம் விரும்புவதாகவும், அது தொண்டர்களுக்கு பல வாய்ப்புகளை வழங்கும் எனவும் சசிதரூர் கூறினார்.

ஆனால் தற்போது சோனியா காந்திக்கு இடைக்கால தலைவர் எனும் கவசத்தை, காங்கிரஸ் காரிய கமிட்டியினர் வழங்கியிருப்பதாகவும் சசிதரூர் தெரிவித்தார்.

அதே போல் பொருளாதாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவிலிருந்து முதலீடுகளை திரும்ப எடுத்துக் கொண்டிருப்பதாகவும், நாட்டில் நிலவும் நிச்சயமற்ற தன்மையே அதற்கு காரணம் எனவும் கூறினார்.

பசுவின் பெயரால் நடக்கும் தாக்குதல்களால், சமூக நல்லிணக்கம் தேய்ந்து வரும் நாட்டில், முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் விரும்பவில்லை எனவும் சசிதரூர் கூறினார்.

தொடர்ந்து பிரதமர் மோடி குறித்து பேசிய அவர், எதற்கெடுத்தாலும் மோடியை விமர்சிக்கக் கூடாது எனவும், எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களில் ஈடுபடவேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க எது காரணம் என நாம் சிந்திக்க வேண்டும் எனவும், ஸ்வச் பாரத், உஜ்வாலா யோஜனா போன்ற திட்டங்கள் உண்மையிலேயே நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே