தமிழகம் முழுவதும் 412 மையங்களில் நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுக்கு பயிற்சி

தமிழகம் முழுவதும் இன்று முதல் 412 மையங்களில் அரசு பள்ளி ஆசிரியர்களை கொண்டு நீட் மற்றும் ஜே இ இ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

காலாண்டு விடுமுறையையொட்டி 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் வார இறுதி நாட்களில் மட்டும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும்.

இன்று முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை காலையில் 9.30 முதல் 12.40 மணி வரையிலும், பிற்பகலில் 1.10 முதல் 4.20 மணி வரையிலும் பயிற்சி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய நாட்களில் நடத்தப்பட்ட பாடங்களின் அடிப்படையில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் தனியார் மையத்தின் உதவியுடன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு முதல் தமிழ் வழி மாணவர்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் மூலம் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.

மேலும் ஆங்கில வழி மாணவர்களுக்கு ராஜஸ்தானைச் சேர்ந்த எடூஸ் இந்தியா(Etoos India) நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன், அரசு ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் எடுக்கப்படும்.

மாவட்டத்துக்கு 10 ஆசிரியர்கள் வீதம் 32 மாவட்டங்களில் உள்ள 320 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த 6 மற்றும் 7ஆம் தேதிகளில் இது தொடர்பாக சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே