சமூக ஊடக கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்படுமா?

சமூக வலைதள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு தகவல் தொழில்நுட்ப  அமைச்சகம் விரும்பவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதார் எண்ணுடன் சமூக ஊடகங்களின் கணக்குகளை இணைப்பதற்கு மிகுந்த கவனமும் எச்சரிக்கையும் தேவை என்று மத்திய அரசு கருதுகிறது.

சமூக ஊடகங்களில் பரவும் வன்முறையைத் தூண்டும் பதிவுகள், ஆபாச பதிவுகள், பெண்களை தவறாக சித்தரிக்கும் பதிவுகள் மற்றும் தவறான செய்திகளைப் பரப்புவோரை பிடிப்பதற்கான கருவியாக ஆதாரைப் பயன்படுத்துவதில் மத்திய அரசுக்கு உடன்பாடு இல்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆதார் தனிநபர் விவரங்கள் பாதுகாக்கப்படுவது குறித்து உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கடந்த காலங்களில் பல்வேறு  உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. 

சமூக ஊடகங்களுடன் ஆதார்எண்ணை இணைக்கும் திட்டம் உள்ளதா?? என்று அண்மையில் மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு பதில் தாக்கல் செய்ய உள்ள மத்திய அரசு, ஆதாரை செயல்படுத்தும் தனித்துவ தகவல் சேகரிப்பு ஆணையத்துடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு சட்ட அமைச்சகத்துடனும் ஆலோசனை நடத்தியுள்ளது.

ஆயினும் சமூக வலைதள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே