சந்திரயான் 2 சுற்றுவட்டப் பாதையில் மாற்றம்

சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை கடைசி முறையாக வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3 ஆயிரத்து 750 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த விண்கலம் நிலவை நெருங்கிவிட்ட நிலையில் தற்போது அதன் சுற்றுவட்ட பாதை ஐந்தாவது மற்றும் கடைசி முறையாக மாலை 6.21 மணியளவில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த 30ம் தேதி சந்திரயான் விண்கலத்தின் நிலவைச் சுற்றும் இடைவெளி 124 கிலோ மீட்டராக குறைக்கப்பட்ட நிலையில் தற்போது ஐந்தாவது மற்றும் கடைசி முறையாக நிலாவில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் சந்திரயான்-2 நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இனி இந்த சுற்று வட்ட பாதையில் அடுத்த ஓராண்டு காலம் அந்த விண்கலம் நிலவை சுற்றி வரும். இன்று இரவு சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரியும் விக்ரம் விண்கலம் வருகிற ஏழாம் தேதி நிலாவில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விக்ரம் கலம் தரை இறங்கிய பின்னர் 4 மணி நேரம் கழித்து அதிலிருந்து பிரக்யான் கலம் பிரிந்து நிலவின் தரையில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊர்ந்து சென்று ஆய்வு பணிகளை மேற்கொள்ளும்.

விக்ரம் பிரக்யான் விண்கலங்கள் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும் நிலையில் சந்திரயான்-2 தனது அடுத்த ஒரு ஆண்டுகாலம் நிலவை சுற்றி வந்து ஆராயும். இதன் மூலம் இந்தியாவின் வழியில் புதிய மைல் கல்லை எட்டி சாதனை படைக்க உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே