கழிவு நீர் மறுசுழற்சி மையத்தை பார்வையிட்டார் முதலமைச்சர்

அமெரிக்காவில்  லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் அமைந்துள்ள கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி லண்டன், அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி லாஸ் ஏஞ்சலிஸ் சென்றடைந்த முதலமைச்சருக்கு, விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அங்குள்ள அனாஹெய்ம் (anaheim) என்ற இடத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கழிவு நீரை மறு சுழற்சி செய்யும் நிலையத்தை பார்வையிட்டார். அப்போது வீடுகளில் இருந்து கழிவுநீரை மறுசுழற்சி செய்து சுத்தமாக்கி மீண்டும் அதனை பயன்படுத்தும் முறை மற்றும் தொழில்நுட்பம் குறித்து, அந்த அந்த நிலையத்தின் அதிகாரிகள் முதலமைச்சருக்கு விளக்கினார்கள்.

வீடுகளில் இருந்து வரும் கழிவு நீரை பலகட்டங்களாக சுத்திகரித்து, வீடுகளின் கழிவறை பயன்பாடு மற்றும் விவசாயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்துவது குறித்து விளக்கமளித்தனர்.

அப்போது அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர்.

இந்த மையத்தில் ஒரு நிமிடத்தில் 4 ஆயிரம் கேலன் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யப்படுகிறது. மேலும் 1 லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சேகரிக்கும் வகையில் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.  

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே