இப்படியும் ஒரு மாவட்ட ஆட்சியர்..!

கரூர் மாவட்டம் குளித்தலையில் நடுரோட்டில் மயங்கிய முதியவரை போக்குவரத்துக் காவலர் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தூக்கிச்சென்று மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கரூரிலிருந்து குளித்தலை நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

டோல்கேட் பகுதி அருகே சென்ற போது 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரத்தில் மயங்கி விழுந்ததை பார்த்துள்ளார். அவரை போக்குவரத்துக் காவலர் தூக்க முயற்சித்ததையும் பார்த்துள்ளார்.

உடனடியாக தனது வாகனத்தை நிறுத்திய ஆட்சியர் அன்பழகன், அந்த பகுதியில் போக்குவரத்து காவலர் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து முதியவரை தூக்கிச் சென்று அருகில் இருந்த டீக்கடையில் அமர வைத்து குடிக்க தண்ணீர் வாங்கி கொடுத்து, அவரை ஆசுவாசப்படுத்தி உள்ளார்.

பின்னர் தனது அலைபேசியின் மூலம் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து முதியவரை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் அரசு மருத்துவமனையை போனில் தொடர்பு கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக முதியவருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறும் அறிவுறுத்தி உள்ளார்.

முதியவரை காப்பாற்ற முயன்ற போக்குவரத்துக் காவலரை ஆட்சியர் பாராட்டினார். மேலும் சம்பந்தப்பட்ட முதியவரின் குடும்ப சூழல் குறித்து ஆய்வு செய்து தகவல் அளிக்குமாறு குளித்தலை வட்டாட்சியருக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர், தகுதி இருக்கும் பட்சத்தில் அவருக்கு உடனடியாக முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அன்பழகனின் மனிதநேயமிக்க இந்த செயல் இப்பகுதி மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே