வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவில் தேர்பவணி நடைபெறுவதையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால், போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய பெருவிழா கடந்த 29 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்னை ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாளான இன்று சிறப்பு திருப்பலியும் அதைத்தொடர்ந்து பெரிய தேர்பவணியும் நடைபெறுகிறது.
மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ள தமிழகம் மட்டுமல்லாது, வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள், குடிநீர் மற்றும் கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.