வீட்டுச் சிறையில் சந்திரபாபு நாயுடு..!

ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்று 100 நாட்களை நிறைவு செய்துள்ளார்.

ஆனால், ஜெகன் மோகன் பதவியேற்றது முதல் தற்போது வரை தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 500 பேர் தாக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 8 பேர் இதுவரை கொல்லப்பட்டு இருப்பதாகவும் புகார் கூறிய சந்திரபாபு நாயுடு, ஆளும் அரசைக் கண்டித்து குண்டூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து பல்நாடு பகுதியில் உள்ள அத்மகூர் கிராமம் நோக்கி புதன் கிழமை அன்று பேரணி நடத்த உள்ளதாக அறிவித்தார்.

இதை அடுத்து மாவட்டத்தின் பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், பேரணியில் பங்கேற்பதற்காக கட்சியின் மூத்த தலைவர்களும், தொண்டர்களும் இன்று காலை தயாரான நிலையில், சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

இதை அறிந்த தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தலைமையில் ஒன்று கூடினர். அமராவதியில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் வீட்டிற்குச் சென்ற அவர்கள்,போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து நாரா லேகேசையும் போலீசார் வீட்டுக் காவலில் வைத்தனர். தேவினேனி அவினாஷ், கேசினேனி நானி, பூமா அகிலபிரியா ஆகிய மூத்த தெலுங்கு தேசம் தலைவர்களும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அரசின் நடவடிக்கையை அடுத்து, கட்சியின் மூத்த தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சந்திரபாபு நாயுடு, காலை 8 மணி தொடங்கி இரவு 8 மணி தாங்கள் இருக்கும் பகுதிகளில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுமாரு அறிவுறுத்தியுள்ளார். அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக குண்டூர் மாவட்டம் முழுவதும் போலீசார் உச்சகட்ட பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே