தியாகி இமானுவேல் சேகரனின் குருபூஜை முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகிற 11-ந் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அக்டோபர் மாதம் 30-ந் தேதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை நடைபெற உள்ளது.

இதையொட்டி, இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு நாளை முதல் 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த தடை உத்தரவின்படி, பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்தவும், 5 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த கட்டாயம் முன் அனுமதி பெற வேண்டும்.

இதுதவிர, வருகிற 15-ந் தேதி வரையும், அக்டோபர் மாதம் 25-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையும் வெளிமாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள், சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்களில் நினைவிடங்களுக்கு அஞ்சலி செலுத்த வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஒரு கிலோ மீட்டருக்குள் மட்டுமே மாவட்ட நிர்வாகத்தின் முன்அனுமதி பெற்று ஜோதி எடுத்து வரவேண்டும்.

மேலும், அஞ்சலி செலுத்தவரும் வாகனங்கள் மாவட்ட நிர்வாகத்தின் முன்அனுமதி பெற்றுத்தான் வரவேண்டும் என்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே