ரயில்வே வருவாயில் ரூ.12,000 கோடி பற்றாக்குறை

நடப்பு நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில் ரெயில்வே வருவாயில் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய ரயில்வே டிக்கெட் கட்டணம், சரக்கு கட்டணம் மற்றும் இதர வருமானங்களில் இந்த நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில் தனது வளர்ச்சி விகிதத்தில் எந்தவொரு இலக்கையும் எட்டவில்லை என அதன் ஆவணங்களில் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரயில்வேக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாயில் சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் இந்த ஆண்டு ரயில்வேயின் வருவாய் 3 புள்ளி 3 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம் செலவும் 8 புள்ளி 65 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதில் ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் ஆகியவற்றுக்கான 11ஆயிரத்து 852 கோடி ரூபாய்க்கான செலவு கணக்கில் சேர்க்கப்படவில்லை என்பதால் இது பற்றாக்குறையாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டு முடிவில் இந்த பற்றாக்குறை 30 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் நடப்பு நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில் பயணிகள் மூலம் வருவாய் 9 புள்ளி 65 சதவீத வளர்ச்சி அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் 4 புள்ளி 56 சதவீதமே வளர்ச்சி எட்டப்பட்டது.

அதேபோல சரக்கு கட்டணம் மூலம் 12 புள்ளி 22 சதவீத வளர்ச்சி அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் 2 புள்ளி 80 சதவீதமே அடைய முடிந்தது.

ரயில்வே சமீபத்தில் சில கட்டண குறைப்பு மற்றும் சலுகைகளை அறிவித்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இதுபற்றி ஆலோசனை நடத்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே