பொலிவியாவில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க முடியவில்லை

பொலிவியா நாட்டில் அமேசான் காட்டில் பற்றி எரியும் தீயை அணைக்க முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டில் 3800 சதுர கிலோமீட்டர் பரப்பளவு வனத்தில் தீ பற்றி எரிந்து வருகிறது. கிட்டத்தட்ட 10 லட்சம் ஏக்கரில் பற்றி எரியும் காட்டுத் தீ நாளுக்கு நாள் பரவி வருவதால் அதனை கட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை உருவாகி உள்ளது.

தீயை அணைக்கும் பணியில் 2000 வீரர்களை பொலிவியா அரசு ஈடுபடுத்தி உள்ள நிலையில், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டவர்களின் இருவர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து பெற்றுள்ள விமானங்கள் மூலமும், தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் கட்டுக்குள் வர மறுக்கும் காட்டு தீயால் பொலிவியா அரசு திண்டாடி திணறி வருகிறது.

ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள அந்நாட்டு அரசுக்கு, காட்டுத் தீ புதிய சிக்கலை உருவாக்கி உள்ளது. இதனால் தீயை அணைக்கும் பணியில் உதவிக்கரம் நீட்டுமாறு பிற நாடுகளையும் தொண்டு நிறுவனங்களையும் பொலிவியா அரசு கேட்டுக் கொண்டுள்ளது. எந்த வழியில் எல்லாம் தீயை அணைக்க உதவி கிடைக்குமோ அதனை எல்லாம் நாடும் நிலைக்கு அந்த நாடு வந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே