பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாகப் பதிவிட்டவர் கைது

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கிஷோர் கே சுவாமி எனும் நபர் சமூக வலைதளங்களில் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக கருத்துக்களை வெளியிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பெண் பத்திரிக்கையாளர் ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கிஷோர் கே. சுவாமிக்கு எதிராக புகார் அளித்தார்.

அந்த புகார் மனுவில் பத்திரிக்கை மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரியும் பெண் பத்திரிக்கையாளர்களின் பெயரை குறிப்பிட்டு ஆபாசமாகவும், அவதூறாகவும் பதிவிட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் ட்விட்டர், பேஸ்புக் பக்கங்களில் இருந்து அவதூறு பதிவுகளை கிஷோர் கே சுவாமி நீக்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால், ரெகவரி முறையில் அவதூறு பதிவுகளை உறுதி செய்த போலீசார் கிஷோர் கே சுவாமியை கைது செய்துள்ளனர்.

இதே போல தமிழ்நாடு பெண் பத்திரிக்கையாளர் மையம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்து கிஷோர் கே சுவாமியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே