பிரதமர் மோடி,சீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மனு

மாமல்லபுரம் வர இருக்கும் பிரதமர் மோடி – சீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய – மாநில அரசுகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க தடை விதித்திருந்த போதிலும், சமீபத்தில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ விபத்தில் பலியானதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்தச் சூழ்நிலையில், மாமல்லபுரத்திற்கு வரும் 11 ஆம் தேதி வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின் பிங் உள்ளிட்டோரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சார்பில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை ஆணையர் பாஸ்கரன் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்கும் வகையில் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் அக்டோபர் 9ம் தேதி முதல் அக்டோபர் 13-ம் தேதி வரையிலான ஐந்து நாட்களுக்கு அரசின் சார்பில் பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டுமென அந்த மனுவில் கோரப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் முறையிட்டார்.

அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை வரும் 3ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், ஏற்கனவே பேனர் வழக்கில் எதிர் மனுதாரராக உள்ளவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கும்படியும் உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே