பிக் பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீரழிவு – அமைச்சர் ஜெயக்குமார்

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தின் மூலம் ஆள்மாறாட்டத்தை துவக்கி வைத்தவர் கமலஹாசன்தான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் மற்றும் காதி சிறப்பு விற்பனை துவக்கவிழா சென்னை குறளகத்தில் நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார்.

அப்போது அவர், “கமலஹாசன் இன்ஸ்டன்ட் சாம்பார், புட்டு மாதிரி திடீரென கருத்து கூறுவார், திடீரென காணாமல் போய்விடுவார்” என்றார்.

தேர்தல் நேரத்தில் மட்டும் வரும் கமலஹாசன், அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிடுவார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாச்சார சீரழிவு என்று கூறிய அமைச்சர், பிக் பாஸ் வீடு அலிபாபா குகை போன்றது, அங்கிருப்போர் பயந்து வெளியில் ஓடிவருகின்றனர் என்றார்.

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தின் மூலம் ஆள்மாறாட்டத்தை துவங்கியவர் கமலஹாசன்தான் என்றும், கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் கமலஹாசன் அரசியல் பேசுவது தவறு என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே