பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 3 நாட்களில் 2 அடி உயர்வு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 2 அடி உயர்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும் 32 புள்ளி 8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும்.இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் 94 அடியாக இருந்த நீர்மட்டம் 96 அடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம் தற்போது மழையளவு குறைந்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 126 கனஅடியில் இருந்து 6 ஆயிரத்து 483 கனஅடியாக குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 96 புள்ளி 5 அடியாகவும் நீர் இருப்பு 25 புள்ளி 7 டிஎம்சி யாகவும் உள்ளது. அணையிலிருந்து பாசனத்திற்காக பவானி ஆற்றில் ஆயிரத்து 350 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலில் 2 ஆயிரத்து 300 கனஅடி நீரும் என மொத்தம் 3 ஆயிரத்து 650 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே