அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினர் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி 74-வது ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க்கிற்கு வந்தார். நியூயார்க் நகரில் அவருக்கு இந்தியர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டனிநோ குட்ரெஸ் ஏற்பாடு செய்துள்ள பருவநிலை மாற்றம் தொடர்பான கருத்தரங்கிலும் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

இதே போன்று பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை குறித்து பன்னாட்டு தலைவர்களுடனும் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தின கொண்டாட்டத்தை ஒட்டி வருகிற 24-ஆம் தேதி அன்று நியூயார்க் நகரில் இந்திய அரசு சார்பில் நடைபெறும் தலைமையின் முக்கியத்துவம் என்ற சிறப்பு நிகழ்ச்சியில் நியூசிலாந்து, தென்கொரியா, சிங்கப்பூர் நாட்டு தலைவர்களும் மோடியுடன் பங்கேற்கிறார்கள்.

நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபை தலைமை அலுவலகத்தின் உச்சியில் காந்தி சூரிய ஒளி பூங்கா தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, கட்டிட உச்சியில் சூரிய ஒளி மின் தகடுகள் மூலம் மின்னுற்பத்தி செய்யும் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.

இந்திய அரசின் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியுடன் அந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இதே போன்று ஓல்டுவெஸ்ட்பெரியில் உள்ள நியூயார்க் பல்கலை கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி அமைதிப் பூங்காவையும், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

இதன் பின்னர் காந்தி நினைவாக தபால் தலையை வெளியிடுகிறார்.24-ஆம் தேதி அன்று பிரதமர் மோடிக்கு பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் தூய்மை இந்தியா திட்டத்திற்காக சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

25-ஆம் தேதி அன்று, புளூம்பெர்க் சர்வதேச வர்த்தக அமைப்பின் கருத்தரங்கில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அங்கு சிறப்பரை ஆற்றுகிறார். இதன் பின்னர் இந்திய அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர் மாநாட்டிலும் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

27-ஆம் தேதி அன்று ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அந்த கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் நாடு திரும்புகிறார்.

இந்த பயணத்தின் போது,20 நாட்டுத் தலைவர்களை சந்திக்கும் மோடி, 24-ஆம் தேதி அன்று அமெரிக்க அதிபர் டிரம்புடன், பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ஒரே வாரத்தில் இரு நாட்டு தலைவர்களும் இருமுறை சந்திப்பது சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த தாக கருதப்படுகிறது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே