நடிகர் விஷால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்

வரி செலுத்தாத விவகாரத்தில் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகர் விஷால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

சென்னை வடபழனியில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி எனும் நிறுவனம் இயங்கி வருகிறது இங்குள்ள ஊழியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்பட்ட ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வரியை வருமான வரித்துறைக்கு நடிகர் விஷால் முறையாக செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து நடிகர் விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர் பதில் அளிக்காததால் வருமான வரித்துறை சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் கடந்த 2ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகர் விஷாலுக்கு சம்மன் அனுப்பியது.

விஷாலுக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஆன நிலையில் விஷாலுக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு வருமான வரித் துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் விஷாலுக்கு கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டு வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் விஷால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி மலர்மதி முன்பு இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். விஷால் தரப்பு வழக்கறிஞர் ஆங்கிலத்தில் வாதிட்டதால் குறுக்கிட்ட நீதிபதி அவரை தமிழில் வாதிடுமாறு கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே