தீபாவளியையொட்டி இயக்கப்படும் அரசு பேருந்துகளில் இன்று முன்பதிவு தொடக்கம்

தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை ஒட்டி வெளியூர்களில் பணிபுரிபவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் பேருந்துகளில் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையின்போது தென்மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டது. மேலும் தேவைக்கு ஏற்ப சிறப்பு ரயில்களை இயக்கவும் தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. ஆனால் சிறப்பு ரயில்களில் முன்பதிவு உடனே முடிந்துவிடும் என்பதால் பெரும்பாலானோர் தனியார் ஆம்னி பேருந்துகள் மற்றும் அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்வார்கள். சென்னையிலிருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் 1200 பேருந்துகளில் நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். அவற்றில் பயணிக்க 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன் படி அக்டோபர் 25-ஆம் தேதி சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு இன்று ஆகஸ்டு 27-ஆம் தேதி முன்பதிவு தொடங்குகிறது.

www.tnstc.in மற்றும் இரண்டு தனியார் இணையதளங்கள் மூலம் பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீபாவளி பண்டிகையின்போது எவ்வளவு சிறப்பு பேருந்துகள் இயக்குவது என்பது குறித்து அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்களுடன் அடுத்த இரண்டு வாரங்களில் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளதாகவும் அதன் பிறகு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நாட்களில் சென்னை புறநகர் பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதால் அதனை குறைக்கும் வகையில் திட்டமிட்டு பேருந்துகளை இயக்குவது குறித்து போலீசார் உடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே