தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதிக்கவில்லை – உச்சநீதிமன்றம்

கூவம் ஆறு மாசடைவுக்காக தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்படவில்லை என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.

சென்னை மாநகரில் ஓடும் கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவை மாசடைந்து விட்டதாகவும், அதை தமிழக அரசு தடுக்க தவறியதாகவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஜவகர் சண்முகம் என்பவர் உள்பட சிலர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள், தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான முதன்மை அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவடைந்து, இந்த அமர்வு அளித்த தீர்ப்பில், கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய நீர்நிலைகள், தங்குதடையின்றி மாசடைந்து வருகின்றன. அவை சாக்கடையாகவே மாறிவிட்டன. இதை தடுக்க தவறிய மாநில அரசின் தோல்வியையே இந்நிகழ்வு காட்டுகிறது.

நீர்நிலைகளை மாசடைய செய்தவர்களுக்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தயாரித்த 351 மாசடைந்த ஆறுகள் பட்டியலில் மேற்கண்ட 3 நீர்நிலைகளும் இல்லை. இருப்பினும், இவை மாசடைந்து விட்டது என்பதிலோ, அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை போதுமானது அல்ல என்பதிலோ மாற்றுக்கருத்து இல்லை.

மாநில அரசின் தோல்வியை கருத்திற்கொண்டு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழக அரசு ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறோம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த தொகையை, சுற்றுச்சூழலை மேம்படுத்த பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்திருந்தது.
ரூ.100 கோடி அபராதம் செலுத்த விதித்திருந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது.  இந்த மனு விசாரணைக்கு வந்தது. 

இதன்மீது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டதில், கூவம் ஆற்றை மாசுபடுத்தியதற்காக தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை செய்ததே தவிர, அபராதம் விதிக்கவில்லை என கூறி தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே