தமிழகம், புதுவையின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்றின் சாதக போக்காலும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் மேலடுக்கு சுழற்சியாலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வடமேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வலுவடையும். எனவே தமிழக கடற்கரை பகுதிகளில் இருந்து 400 கிலோ மீட்டருக்கு அப்பால் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடல் அலைகள் தீவிரமானதாக இருக்கும் என்றும், எனவே 400 கிலோ மீட்டருக்கு அப்பால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே