கோவை அருகே மதுபோதையில் இளம்பெண்ணை துரத்திச் சென்று ஆபாசமாகப் பேசிய காவலர்

கோவை அருகே மதுபோதையில் இளம் பெண்ணை துரத்தி சென்று ஆபாசமாக பேசிய காவலரை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வன்னியன் கோவில் பகுதியில் ரவிக்குமார் என்பவர் லேத் பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி சரண்யா கீரணத்தம் பகுதியில் உள்ள தனது உறவினரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அத்திப்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது போதையில் நின்றிருந்த பிரபாகரன் என்ற காவலர் சரண்யாவை தனது இரு சக்கர வாகனத்தில் முந்திச் சென்று வழிமறித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா அங்கு உள்ள பேன்சி ஸ்டோர் ஒன்றில் தஞ்சமடைந்ததோடு, தனது கணவருக்கும் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குள் காவலர் பிரபாகரனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.

அப்போது அவர் மது போதையில் இருப்பது, தனது இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை வைத்திருந்ததும் தெரியவந்தது.

மேலும் காவலர் பிரபாகரன் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் இடம் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதும் தெரிந்தது.

இதையடுத்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் பிரபாகரனை பொதுமக்கள் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே