ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

மலையாள மொழி பேசும் மக்களின் பாரம்பரிய சிறப்பு மிக்க ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகாபலி சக்கரவர்த்தியின் அகந்தையை அடக்கிட, திருமால் வாமன அவதாரம் எடுத்து, மூன்றடி நிலத்தை தானமாக கேட்க, அதற்கு மகாபலி இசைவளித்தவுடன் முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்து, மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, திருமால் பாதாள உலகிற்கு தள்ளினார்.

பாதாள உலகிற்கு செல்லும் முன்பு, ஆண்டுக்கு ஒருமுறை தன்னுடைய மக்களை காண வேண்டும் என்ற மகாபலி சக்கரவர்த்தியின் வேண்டுதலை திருமால் ஏற்று அருள் புரிந்தார் எனும் புராண கதை உள்ளது.

அதன்படி, மகாபலி சக்கரவர்த்தி மக்களை காணவரும் தினமே திருவோணத் திருநாளாக மலையாள மக்களால் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி ஓணம் கொண்டாடும் மக்களுக்கு தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த இனிய நாளில் அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை பின்பற்றி மக்கள் அனைவரும் சாதி, மத, பேதங்களை களைந்து ஒற்றுமையாக இன்புற்று வாழ்ந்திட வேண்டும் எனவும் முதலமைச்சர் வாழ்த்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே