இன்று உலக ஞாபகமறதி தினம். வேலைப்பளு, நரப்பியல் சிதைவு, கட்டுப்பாடற்ற உணவு பழக்க வழக்கங்களால் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் ஞாபக மறதி நோய் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
உண்மையில் நரம்பியல் சிதைவு காரணமாக மெதுவாக ஆரம்பித்து நாட்கள் செல்ல செல்ல மோசமான நிலைமைக்கு நகரும் நாட்பட்ட நோய்தான் ஞாபக மறதி என்கின்றனர் மருத்துவர்கள்.
திசுக்கள் அழிவதால் குணப்படுத்த முடியாத இந்த நோய் 1906 ஆம் ஆண்டு ஜெர்மானிய மன நோய் மருத்துவரான ஆலோயிசு அல்சைமர் என்பவரால் முதன் முதலில் கண்டறியப்பட்டது.
அல்சைமர் நோயையும் அதனோடு தொடர்புடைய முதுமை மறதியையும் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21-ஆம் நாள் உலக அல்சைமர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
நோயின் கடுமையைக் கருத்தில் கொண்டு சில நாடுகளில் இந்நாள் ஒரு மாதம் முழுவதும் கடைபிடிக்கப் படுகிறது.
நோயின் பாதிப்புகளாக வெளிப்படுபவை:
- பிரச்சனைகளைத் தீர்ப்பதில் சவால்
- பழக்கமான வேலைகளை முடிப்பதில் சிரமம்
- சமீபகால தகவல்களை மறத்தல்
- தேதி, நேரம், இடம், மனிதர்கள் அறிவதில் குழப்பம்
- சமூக விஷயங்களில் ஆர்வமின்மை
மறதி நோயைத் தடுக்க வழிகள்:
- நிறைய வாசித்தல்
- எழுதுதல், இசைக்கருவிகள் மீட்டுதல்
- முதியோர்கள் கல்வி கற்க முற்படுவது
- குறுக்கெழுத்து, புதிர், சதுரங்கம் போன்ற உள்ளரங்க விளையாட்டுகளில் ஈடுபடுவது
- நடைபயிற்சி, யோகா, தியானம்
தினசரி வாழ்க்கையில் முறையான உடற்பயிற்சி திட்டங்கள் மிகுந்த நன்மை பயக்கும், அதே நேரத்தில் இதற்காக மேற்கொள்ளப்படும் சில சிகிச்சை முறைகள் ஆபத்தானவை என்பதால் அவற்றை பரிந்துரைப்பதில்லை என்கின்றனர், மருத்துவர்கள்.