இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு எதிராக கைது வாரண்ட்

குடும்ப வன்முறை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத இந்திய கிரிக்கெட் வீரர் ஷமிக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து மேற்கு வங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஷமியும், அவரது சகோதரர் ஹஸித் அகமது தன்னைத் துன்புறுத்தியதாகவும், கொலை செய்ய முயன்றதாகவும் ஷமியின் மனைவி ஹசின் ஜகான் கொல்கத்தா காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்தப் புகார் தொடர்பான வழக்கு கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி பலமுறை உத்தரவிட்ட போதும் இருவரும் ஆஜராகவில்லை.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணையின் போது ஆஜராகாத கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மற்றும் அவரது சகோதர் ஹசித் அகமது இருவருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அடுத்த 15 நாட்களுக்குள் முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் அவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வந்த முகமது ஷமி இன்னும் ஓரிரு நாட்களில் நாடு திரும்ப உள்ளார், இதனால் அவரை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே