அமெரிக்காவுடன் எந்த நிலையிலும் பேச்சுவார்த்தை இல்லை

இனி எந்த நிலையிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது என ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது ஈரான் தான் தாக்குதல் நடத்தியது என அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற அமெரிக்க ராணுவம் தயாராக இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார்.

எனினும், அமெரிக்கா தங்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என கூறிய ஈரான், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்தால் போரை சந்திக்க வேண்டிய தேவை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில், இனி எந்த நிலையிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது என ஈரான் உயர்மட்டத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொலைக்காட்சில் பேசிய அவர், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எந்த திட்டமும் ஈரானிடம் இல்லை என்றார்.

சவுதி அரேபிய எண்ணெய் ஆலை தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தி ஈரானுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா திட்டமிடுவதாக கூறிய அவர், அமெரிக்காவின் இந்தத் திட்டத்திற்கு ஈரான் பலியாகாது என்றார்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை என்றும், இனி அவர்களுடன் எந்த நிலையிலும் பேச்சுவார்த்தை இல்லை என்றும் காமெனி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே